பிப்ரவரி 24 , 2022 உக்ரைன் தலைநகர் கீவ், விடியற்காலை நாலு மணி இருபத்தைந்து நிமிடங்கள், மைத்ரேயியின் ஆழ்ந்த தூக்கம் நொடியில் கலைந்து , கட்டிலில் இருந்து கீழே தள்ளப்பட்டாள். அவள் அறையில் தன் வாழ்நாளில் இதுவரை காணாத அதிர்வையும், கேளாத உரத்த சத்தத்தையும் கேட்டு மிரண்டு போனாள் மைத்ரேயி. “இட்ஸ் என் எர்த் குவேக்!!!”என்று அவள் கட்டிலிற்கு அடியில் புகுந்து கொள்ள முயன்ற போது அறைக் கதவை உதைத்து உள்ளே பாய்ந்தாள் ஜெசி! “ ரஷ்யா டிக்ளர்ட் ஸ்பெஸல் மிலிட்ரி ஆபரேஷன் ஆன் உக்ரைன்!” என்று கதறியபடி “ நம்மள ஊர விட்டு இவாக்குவேட் பண்ண வேன் வந்துருக்கு, சீக்கிரம் கிளம்புடி” என்று தன் அறையை நோக்கி ஒடினாள் ஜெசி.
பத்து நிமிடங்களில் மைத்ரேயி தன் மருத்துவப் படிப்பு சம்மந்தமான புத்தகங்களையும், முக்கிய ஆவணங்களையும்,ஆடைகளையும் எடுத்து டிராவலர் பேக்கில் தினித்த போது, அருகாமையில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கும் சப்தம். அடுத்த அதிர்வில் அவள் அறையின் ஜன்னல் கதவுகள் படபடக்கும் இறக்கைகள் போல் அடித்து, கண்ணாடி மின்னலென விரிசலானது. பதறிய மைத்ரேயி காதை பொத்தி கொண்டு பேக்குடன் வெளியேற ஓடினாள். ஏதோ சில எண்ணங்கள் அவளை நிறுத்தியது. அறையின் கப்போர்டுகள் அனைத்தையும் திறந்தாள். கடைசி கப்போர்டை திறந்தவுடன் அவளது இரு கண்களும் தங்களுக்குள் மகிழ்ந்து ஹைஃபைவ் செய்து கொண்டன. தனது லாவண்டர் லெஹெங்காவை எடுத்து கையில் சுத்தி, மார்போடு இறுக்கி அணைத்துக் கொண்டு ஹாஸ்டலை விட்டு ஜெசியுடன் வேனில் ஏறினாள் மைத்ரேயி.

புகைமூட்டமும் பதட்டமும் நிறைந்த இடத்திலிருந்து வெகு தூரம் கடந்து வந்ததை சற்று கண் அயர்ந்து திடுக்கிட்டு விழித்ததும் உணர்ந்தாள் மைத்ரேயி. “இப்ப நம்ம என்ன பண்ண போறோம்? இந்தியா திரும்ப முடியுமா? இப்பொழுது தங்கும் இடம் பாதுகாப்பானதா?” என்று பல கேள்விகளை ஜெசியிடம் கேட்டுக்கொண்டிருந்தாள். “நீ தான் ஞானி மாதிரி பேசுவியே?..வா பாத்துக்கலாம் “என்று மைத்ரேயியின் தோள் மேல் கை போட்டுக்கொண்டு அறைக்குள் இழுத்துச் சென்றாள் ஜெசி.
பிப்ரவரி மாதக் கடைசியில் கீவிலிருந்து மரியாபொல் என்ற நகரில் உள்ள ஒரு பெரிய அரங்கத்திற்கு இவர்களை கொண்டுச் சென்றனர். அங்கு மிஷா என்ற நடுத்தர வயது பெண்ணைச் சந்தித்தாள் மைத்ரேயி. மிஷாவின் மேனி குருதியால் குளிப்பாட்டிய உடல் போல் காட்சியளித்தது. அவள் கண்கள் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று சொல்வது போலிருந்தது. அவளது கூந்தலில் இரத்த கட்டிகள் பொடி பொடியாகப் படர்ந்திருந்தன. உதடுகள் வெடித்தும் தண்ணீரை வெறுத்திருந்தன. மிஷாவின் அருகில் உட்கார்ந்திருந்த சிறுமியிடம் ” உன் பெயர் என்ன?” என்று கேட்டதும் “நெடியா” என்று புன்னகைத்தாள். அங்கு தங்கியிருந்த நாட்களில் மிஷாவிற்கு துணையாக இருந்தாள் மைத்ரேயி. தான் கற்றறிந்த ரஷ்ய மொழியில் மிஷாவின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட நாட்களை பற்றி அறிந்து கொண்டாள் மைத்ரேயி.
பிப்ரவரி 26, இரவு 11 மணியளவில் மிஷா, மிஷாவின் கணவர் விக்டர், அவளது பிள்ளைகள் இர்வின், நெடியா, மேக்ஸிம் ஆகியோர் வீட்டின் ஜன்னல் வழியே தொலைதூரத்தில் அணு ஆயுத தாக்குதலால் புகை கொப்பளித்து வருவதை பார்த்து கொண்டிருந்தனர். மிஷா தனது தங்கை “மிலா” வைத் தேடினாள். மிலா நிறை மாத கர்ப்பிணி, கணவன் ராணுவ வீரன். தன் கண்ணீரை சிறிதளவும் கண்டு கொள்ளாது குறுநகையோடு இருந்த நிலவை சிட்அவுட்டிலிருந்து பார்த்து கொண்டிருந்தாள் மிலா.
மிலாவின் தலையில் மெதுவாக கை வைத்தாள் மிஷா. மிலாவை எப்படியாவது நாளை ஹாஸ்பிடலில் சேர்த்து விட வேண்டும் என்று நினைத்து பெருமூச்சு விட்டாள். சற்று நேரத்தில் அனைவரும் உறங்கி போனார்கள். அதிகாலை 3:17, பலத்த இறைச்சல் கேட்டு நடுங்கி எழுந்தாள் மிஷா. விமானப் படைத் தாக்குதல் என்பதை அறிந்து அறையை விட்டு வெளியேற, எரிபந்து போல் ஏதோ ஒன்று வீட்டின் முன் புல்வெளியில் விழுந்து, கதவு தீப்பிடித்தது. “தே ஆர் ஷெல்லிங், வீ நீட் டு மூவ் டு தி பேஸ்மெண்ட்” என்று விக்டர் பிள்ளைகளையும், மிஷா, மிலாவையும் அழைத்து பேஸ்மெண்ட்டிற்கு ஓடினான்.
சிறுமி நெடியா துயில் கலைந்து அழ ஆரம்பித்தாள். தண்ணீர் வேண்டி கத்தினாள். விக்டர் தண்ணீர் எடுத்து வர வீட்டிற்கு செல்ல யோசித்தான். மிஷா விக்டரை அனுமதிக்க மறுத்தாள். தாக்குதல் பலமாகின. பதினாறு மணி நேரம் கடந்தது. நெடியா பேசவும் தெம்பின்றி வாடிய மலரானாள் . விக்டர் தன் மகளை பார்த்து பொறுமை இழந்து துடித்தான். “என்ன நேர்ந்தாலும் இந்த அறையை விட்டு வெளியே வராதீர்கள்” என்று விக்டர் மிஷாவிடம் கூறி பின் கதவு வழியாக ஓடி, தண்ணீர் கேன்களை அள்ளி எடுத்து விரைந்தான். அப்போது காலடி சத்தம் கேட்டது. ” எதுவும் செய்ய முயற்சிக்காதே” என்றான் ஒரு ரஷ்ய சிப்பாய். விக்டர் சொல்ல வருவதை அவன் கவனிக்க மறுத்தான். விக்டர் பாய்ந்து தண்ணீர் கேன்களை பேஸ்மெண்ட்டிற்கு செல்லும் படியில் தூக்கி எறிந்து எதிர் புறமாக ஓட ஆரம்பித்தான். தன் காலில் துப்பாக்கியால் சுடப்பட்டான். விக்டர் கூச்சலிட்டான், உதைத்து கீழே தள்ளப்பட்டான்.
“சத்தம் போட்டால் மீண்டும் குண்டுகள் உன்னை துளைக்கும்” என்று எச்சரித்தான் ரஷ்ய போராளி. விக்டர் வலியால் முனகினான். பல துப்பாக்கி குண்டுகள் விக்டரின் இடுப்பு மற்றும் மார்பில் பாய்ந்தது. முழங்கால்களை ஊன்றி நகர முயற்சித்தான். இரத்தத்தில் வழுக்கினான். “நெடியா.. நெடியா” என்று மெலிந்த குரலில் முனகிக்கொண்டே கண் மூடினான். அந்த ரஷ்ய சிப்பாய் பேஸ்மெண்ட்டிற்கு இறங்கி சென்று அறை கதவை துப்பாக்கியால் தட்டினான். மேல் நோக்கி இரு முறை சுட்டான். மிஷா “இர்வின், மேக்ஸிம் மற்றும் மிலாவை நோக்கி உதடுகள் மேல் விரல் வைத்து சமிக்ஞை செய்தாள்”. நெடியாவை தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். “இங்கு யாரும் இல்லை” என்று சொல்லி அந்த ரஷ்ய போராளி வெளியேறினான். நான்கு மணி நேரம் கழிந்தது. அறையை விட்டு மெதுவாக வெளியே வந்தாள் மிஷா.

படியில் உருண்டு வந்த பாட்டில்களை எடுத்து கொண்டு விக்டரை கூப்பிட்டுப் பார்த்தாள் மிஷா. அதற்குள் மழை பெய்வது போல் குண்டு வெடிப்புகளும், துப்பாக்கிச் சூடும் நிகழ்ந்தன. விக்டரின் நிலை அறிய இயலாது கலங்கிப் போனால் மிஷா. அந்த பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்கள் உக்ரைன் சிப்பாய்களும் ரஷ்ய வீரர்களும் போரிட்டனர். பேஸ்மெண்ட்டில் மின்சாரம் துண்டித்து போனது. மிஷா ,மிலா, பிள்ளைகள் அனைவரும் இரு நாட்கள் தண்ணீரை மட்டும் குடித்து வாடிப் போயிருந்தனர். போரின் நெடிப்பு குறைந்து சற்று அமைதி நிலவியது. உக்ரைன் சிப்பாய்கள் மிஷா குடும்பத்தினரை அஸோவ்ஸ்டால் என்ற இடத்தில் உள்ள பெரிய இரும்பு ஆலைக்கு மற்ற மக்களுடன் அழைத்து செல்ல முற்பட்டனர். மிஷா “விக்டர்! விக்டர்!” என்று கதறிய படி வீட்டிலும் வீட்டை சுற்றிலும் தேடினாள், வீட்டின் முன் ஒருவர் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
பதறிப்போய் அவரை தள்ள முயற்சித்து அவர் விக்டர் அல்ல என்பதை உறுதி செய்தாள். “ஹி இஸ் ப்ரீத்திங்! ” என்று கத்தினாள். சிப்பாய்களுடன் சேர்ந்து அவரை வாகனத்தில் ஏற்றினாள். நேரக் குறைவால் மிஷா மன்றாடியும், விக்டரை தேட விடாமல் ராணுவ வீரர்கள் அனைவரையும் மீட்பு வாகனத்தில் ஏற்றினார்கள். வழியில் காக்கை , குருவி போல் பிணங்கள் சாலையோரம் குவிந்து கிடந்ததை மிஷா கவனித்தாள். கொள்ளையர்கள் சேதமடைந்த வீடுகளில் புகுந்து பொருட்களை திருடி கொண்டிருந்தனர். அருகில் ஒரு பெண் தன் கணவன், இறந்து போன தன் மகனை புதைக்க சென்று அங்கிருந்து வர மனதின்றி இவளை மட்டும் இந்த வாகனத்தில் அனுப்பி விட்டார் என்று அழுது புலம்பியதை கேட்டாள். இரத்தம் தோய்ந்த தன் ஆடைகளையும், கைகளையும் பார்த்தாள். இரத்த வாடை அவளை குமட்டச் செய்தது. மிஷா கண்ட காட்சிகளும், கேட்ட பேச்சுக்களும் விக்டரை ஞாபகப்படுத்தியது. தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள் மிஷா.

மிஷா ஜன்னல் கண்ணாடியில் சாய்ந்து அசந்து கண் மூடினாள். அன்று மிஷாவின் மூத்த மகன் மேக்ஸிம்மின் பதினெட்டாவது பிறந்த நாள். அவள் பிள்ளைகள் மூவரும் பசி! பசி! என்று கூச்சிலிட்டு மிஷாவின் இமைகளை திறக்க முயன்றார்கள். மனிதன் தன் உறவுகளை இழந்து, மண், பொருட்களை விட்டு மீளா துயரம் அவனை சூழ்ந்தாலும்,பசி மற்றும் உறக்கத்திற்காக ஏங்கும் கடுந்தாகம் அவனது ஆறாம் அறிவின் பெருமிதத்தை உடைக்கத்தானே செய்கிறது. அவனை அற்பமாக்கி விடுகிறது. மிலாவிற்கு கீழ் முதுகு வலி ஆரம்பித்தது. அருகில் இருந்த மூதாட்டி இதை தெரிவித்து,பத்து நிமிடங்களில் அவர்கள் செல்லும் வழியில் மருத்துவ அவசர ஊர்தி வந்து சேர்ந்தது. மிஷாவும் பிள்ளைகளும் அனுமதிக்க படாததால் மிலா மட்டும் ஊர்தியில் அருகில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தாள்.
மருத்துவமனைக்கு மிக அருகில் நெருங்கிய பொழுது,திடீரென விமானப்படை தாக்குதல் தொடங்கியது. குண்டுகள் தாக்கி அவசர ஊர்தி தடம் புரண்டு விழுந்தது. மிலா இரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அவளது இடது இடுப்பு மூட்டு விலகி இருந்தது. இரண்டு தொடைகளுக்கு இடையே இரத்தம் ஊற்றெடுத்து வந்தது. மிலா வின் மூச்சுக் காற்றில் வெப்பம் குறைந்தது, இதயம் பட்டாம்பூச்சியின் கடைசி நிமிட சிறகுகள் போல் வலுவிழந்து துடித்தது, இமைகள் காற்றில் ஆடும் விளக்கின் ஒளி போல் மெல்லியதாக அசைந்தது, வான்நிறமாக மாறினாள். மருத்துவர் வெரோனிகா “100 பர்ஸண்ட் ஆக்ஸிஜன்! ஸ்டார்ட் சி.பி.ஆர் ! ஐ அம் டூயிங் சி செக்ஸன் ரைட் நவ்! வீ ஹேவ் நோ டைம்! நோ டைம்! என்று உரக்க கத்தினார்.

நாற்பத்து இரண்டு நிமிட தாய், சேயின் உயிர் மீட்பு பணிகளுக்கு பின், மிலா மடிந்து போனாள். அந்த செய்தியை பகிர, உறவுகள் இல்லாத குறை நீக்க மிலாவின் பெண் குழந்தை பிழைத்தாள். போரின் நடுவே போராடி பிறந்தவள் இவள். இழவுச் செய்தி புரிந்து விட்டது போல, வன்முறையின் பரிசாக இன்னும் என்ன வேண்டும் உங்களுக்கு என்று கேட்பது போல, திணறலுடன் வீரிட்டு அலறியது அந்த பெண் சிசு ; அவள் அழுகைக் குரல் மனித அகங்காரத்திற்கு எட்டி விடும் போலும். விக்டர், மிலா வின் நிலை என்னவென்றே அறியாது இரும்பு ஆலையை சென்றடைந்தார்கள் மிஷாவும் பிள்ளைகளும். இரண்டு மாதங்கள் அங்கு கதிரொளியின்றி இருள் பற்றி இருந்தனர். ஒரு நாள் தண்ணீர் தேடி மிஷாவின் இரண்டாவது மகன் இர்வின் வெளியே சென்றான். பீரங்கிகள் முழங்கி ஆங்காங்கே நெருப்பு குவியல்களாய் இருந்தன. இர்வின் பயந்தோடி எங்கும் நீர் கிடைக்காமல், மாசு படிந்த பனி கட்டிகளை தன் சட்டைப் பையிலும், மடியிலும், கையிலும் எடுத்து சேகரித்தான். மிஷா தான் வைத்திருந்த மெழுகுவர்த்தியால் பனி கட்டிகளை சுட வைத்து தண்ணீரை பகிர்ந்து கொடுத்தாள்.
பிறகு இரும்பு ஆலையத்தில் தங்கியிருந்த மக்களுக்கு ஓர் அறிவிப்பு வந்தது “பதினெட்டு வயதிலிருந்து அறுபது வயது வரை உள்ள ஆண்கள் உக்ரைன் ராணுவ படைக்கும், போருக்கும் தயாராகுங்கள் ” என்று. மேக்ஸிம் ராணுவ வீரர்களுடன் அழைத்து செல்லப்பட்டான். வாள் பிடிக்க தெரியாதவனாயினும் போரில் மாய்ந்து போனால் அவன் வீர மரணம் அடைந்து பிறவிப் பயனை பெற்று விடுவானோ?! அடுத்த நாள் மிஷா, இர்வின் மற்றும் நெடியா மரியாபொல்லில் உள்ள அரங்கிற்கு வந்து அடைந்து விட்டார்கள். இத்தனையும் கேட்டு உறைந்து போயிருந்தாள் மைத்ரேயி. “என்னிடம் சில ஆடைகள் உள்ள பெட்டி ஒன்றுதான் இருக்கிறது. என் பிள்ளைகள் தான் என் வளங்கள். இருபது வருட கனவாக விக்டர் கட்டிய வீடு சுடுகாடு ஆனது” என்று கண் கலங்கினாள் மிஷா. நொடியில் கண்ணீரை துடைத்து”விக்டரும், மிலாவும் அவள் குழந்தையும் நலமாக இருப்பார்கள்” என்று மைத்ரேயியிடம் கூறி சிரித்தாள் மிஷா. ஒன்றும் புரியாது பார்த்த மைத்ரேயி அருகில் நெருங்கி வந்து மிஷா ” என் மகள் நெடியா நான் பேசுவதை கவனித்து கொண்டு இருக்கிறாள், அவள் முன் நான் அழுதிட இயலாது, நெடியாவிடம் நாம் வெவ்வேறு ஊர்களுக்கு சென்று ட்ரெஸர் ஹண்ட் விளையாடிக் கொண்டிருக்கிறோம், வெற்றி பெற பல சிரமங்களை சந்தித்தாக வேண்டும் , விரைவில் நம் வீட்டிற்கு சென்று விடலாம் என்று சொல்லியிருக்கிறேன்” என்று காதில் கிசுகிசுத்து புன்னகைத்தாள். நெஞ்சுரம் கொண்ட தேவதை இவள் என்று மிஷாவை நினைத்து நெகிழ்ந்து போனாள் மைத்ரேயி.

சில நாட்கள் கழிந்தன. இந்தியாவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள மைத்ரேயிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. “யாருடி? அம்மாகிட்ட பேச போறியா?” என்றாள் ஜெசி. இச்சு கொட்டி நாக்கை துருத்தி கொண்டு ..”இல்ல! சச்சு தாத்தாகிட்ட..”என்றாள் மைத்ரேயி.
தஞ்சை மாவட்டம் , சுந்தரம் நகரில் வசித்து வருகிறார் சச்சிதானந்தம் தாத்தா. காலை எட்டு மணி. அவரது செல்ஃபோன் ஒலித்தது. மூக்கு கண்ணாடியை சரி செய்து உத்து பார்த்தார். “வெளிநாட்டு நம்பர் மாதிரி இருக்கே!”
சச்சு : ஹலோ
மைத்ரேயி : தாத்தா.. நான் மைத்ரேயி பேசுறேன். சேஃபா இருக்கேன்
சச்சு: ஆ! மயிலு குட்டி, இத்தனை நாளா ஒன்னும் புரிபடல!…ஏய்! லச்சு.. நம்ம… ஹ…நம்ம! பேத்தி நல்லா இருக்காடி.. எனக்கும் உன் பாட்டிக்கும் கண்ணுலேந்து வர கண்ணீர கட்டுப்படுத்த முடியலடா தங்கம். ஆனா அந்த முருகன் பைய கனவுல வந்து சொல்லிகிட்டே இருந்தான்.. பயப்படாத எல்லாம் நல்லாதான் போகுதுனு.. கரெக்டா போச்சு! சொல்லு மைத்து, என்ன பண்ற, பாதுகாப்பா இருக்கியா..? சாப்பிட்டியா? எப்போ இந்தியா வர?
மைத்து: ம்ம்.. பரவால்ல தாத்தா. இங்க அணுகுண்டு சத்தம் தான் எனக்கு டெய்லி அலாரம்! இந்த அறுபது நாட்கள என்னால மறக்கவே முடியாது! இதுவரை ஏழு லட்சம் குடும்பங்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்காங்க! பல ஆயிரம் மக்கள் உயிரிழந்து, காயம் அடைந்து, அனைத்தையும் இழந்து நிச்சயமற்ற நிலையில இருக்காங்க!
சச்சு: ஆமா மைத்து.. நானும் நியூஸ்ல பார்த்தேன். ரொம்ப கொடுமைடா இது.
மைத்து: ஹ்ம்ம்! உனக்கு வெறும் நியூஸ் தான். எனக்கு ஒன்னும் புரியல தாத்தா.. பதவி, பொருள், சர்வாதிகாரம், மண்ணு .. இதெல்லாம் கிடைச்சதுக்கு அப்புறம் என்ன? அடுத்து என்ன இந்த மனுஷனுக்கு? சரி, பகுத்தறிவ பொறுத்த வரையில நம்ம பரிணாம வளர்ச்சி என்ன? ஒரு தனி மனிதன் எடுக்கிற முடிவால உலகத்தில் பெரிய பாதிப்பு ஏற்படுதுன்னா அப்போ அந்த தீய எண்ணங்களுக்கு காரணமாய் இருக்கிற ஜீன என்ன பண்ண முடியும்? சொல்லு!
சச்சு: டார்வின் இந்த காலக்கட்டத்துல இருந்திருந்தா..”Survival of the Evilest!! ” ன்னு சொல்லி இருப்பாரோ என்னவோ?
மைத்து: ஓவரா உருட்டுற! இன்னும் ரெண்டு நாள்ல வந்தே பாரத் ஃபலைட் புடிச்சு சென்னை வந்துருவேன். அப்பா, அம்மா கிட்ட நீயே சொல்லிடு. நான் அவங்க மேல கோவமா இருக்கேன். நம்ம நாட்டுல என்ன படிப்பு இல்லைன்னு என்ன இங்க அனுப்பினாங்க?..ஓகே, பை!
மைத்ரேயியும், ஜெசியும், இந்தியா செல்லும் விமானத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். மைத்ரேயி தன் பெட்டியில் இருந்த லெஹங்காவை கையில் எடுத்து ஏதோ யோசித்து கொண்டிருந்தாள். ” அடிப்பாவி! உன் உயிரே போனாலும் இந்த லெஹங்காவ விட மாட்டியே? அந்த அவசரத்துல இத எப்படி பேக் பண்ண?” என்று கேட்ட ஜெசியை பொருட்படுத்தாமல் மைத்ரேயி லெஹங்காவை எடுத்துக்கொண்டு வேகமாக நடந்தாள். நெடியா அருகில் சென்று தன்னுடைய லாவண்டர் லெஹங்காவை நெடியாவிற்கு போர்த்தி விட்டு” இது ட்ரெஸர் ஹண்ட்ல உனக்கு கிடைத்த பரிசு! ” என்றதும் ” யே! யே! லுக் அட் திஸ் மம்மி! வீ வொன்! வீ வொன்!” என்று குதித்தாள் சிறுமி நெடியா. அவளை கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள் மைத்ரேயி.இர்வினிடம் ” உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டாள் மைத்ரேயி. ” நான் ராணுவ வீரனா ஆகனும்” என்றான். மைத்ரேயி மிஷாவை பார்த்து அவள் கைகளை இறுக்கமாக பிடித்து, சிறுநகையோடு, இவர்களுக்கும் ஒரு மீட்பு விமானம் வரக் கூடாதா? தீது போய் நன்று வாராதா? என்று நினைத்து விடைபெற்றாள்.
மண்ணால் உருவாகி
மண்சொந்தம் கொண்டாடி
உலகப் போர்கள் நடத்தி
தன் இனப்படுகொலை செய்து
மண்ணுக்கு இரையாக்கி
போரில் வெற்றி பெற்று
மண்ணிடம் தோற்று போகின்றான்!!
வசந்த் சுகுமார்
Editors:ஆர்த்தி வசந்த்,பரணீதரன்


Very nice vasanth, you have a greatly improved, a writers success is his ability to bring the exact picture and feelings of the characters to the readers mind. You have done it very well. I always tried to imagine what are the plight of the families during a war time, especially during bombardments, you are able to bring it to light.wishing many more, but still nisha is lingering. Good luck.
LikeLiked by 1 person
Wonderful write up. Made me live through the situation. The real life of war stricken people explained leaves us with a heavy heart. U have taken the place of the characters and written as a witness to the battle field. Really, as u have asked, what’s real victory? Who is to be blamed? Why all this is happening?
LikeLiked by 1 person