குளத்தூர்பட்டி மையத்தில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளி. திங்கட்கிழமையின் உற்சாகம் பள்ளியெங்கும் மலர்ந்து கொண்டிருந்தது. எட்டாம் வகுப்பு அரையாண்டு தேர்வின் முதல் நாள். முதல் நாளன்று ஆங்கிலத்தேர்வு. பளிச்சென்று பள்ளிச் சீருடையுடன் பூபதி வகுப்பறைக்குள் நுழைந்தான். “டேய் மூர்த்தி! என்ன புத்தகத்தை வச்சிகிட்டு முனகிக்கிட்டே இருக்க, இன்னும் அரை மணி நேரத்துல பரிட்சை ஆரம்பிச்சிடும்.. ரெடியா?”
சுருட்டை முடியில் பின்னல் போட்டுக்கொண்டே “அதான் நீ இருக்கியே! எனக்கு முன்னாடி மட்டும் உட்காரு மத்த விஷயத்த நான் பாத்துக்குறேன்” என்றான் மூர்த்தி.
பூபதி பதற்றத்துடன் “வேணாம் சாமி எற்கனவே ஒரு ஆப்பு கிடைச்சது போதும்; சனி , ஞாயிறு லீவ் தானேடா படிச்சிருக்குலாம்ல?”
“மச்சி ,நேத்து நைட் ஷோ.. காதலன் படம்! நம்ம மேலத்தெரு பசங்களோட அண்ணாச்சி கடையில ஆளுக்கு மூனு ஆஃப்பாயில சூடா சாப்பிட்டு ஓடுனோம் பாத்துக்க. ஒரு பிகரு கூட தேறல, ஆனா சூப்பர் படம் மச்சி..லவ்வுக்காக ஹீரோ என்னா அடி வாங்குறான்யா! நம்ம வயசு பசங்க பாக்க வேண்டிய படம்..ஹம்ம்ம்” என்று மூர்த்தி இழுத்த மூச்சில் ஏக்கங்கள் மிகையாகவே இருந்தன. அருகில் நின்று கொண்டிருந்த கார்த்தி “ஓஹோ! அப்படியா? The tiger in the tunnel படிச்சியா, அந்த கதையிலையும் ஒரு ஹீரோ தியாகம் பண்ணுறாரு, இன்னிக்கு கட்டாயம் கொஸ்டின் வரும்”
“ப்ப்..ப்…பா… வந்துட்டான் டா, அப்பா மாதிரியே பேசுறதுக்கு.. டேய் கார்த்தி உன்ன மாதிரி பழசட்டிய எண்ட்டரண்சு எஜ்ஜாம் வைக்காம கடைசி பெஞ்ச்சுல சேத்தது தப்பா போச்சு” என்று கார்த்தியை ஏளனமாக பார்த்தான் மூர்த்தி. கார்த்தி பணிவது போல “என்னா ஜாம் ஐயா?” என்று மூர்த்தியை கேலி செய்தான்.
போடா! என்று விழிகளை பெரிதாக்கிய மூர்த்தி “டைகரு..டனலு?…டே பூபதி.. நீ படிச்சிட்டல்ல?.. ஏன்டா கார்த்தி, இந்த பாடக் கதையெல்லாம் சினிமாவா எடுத்தா பாத்துட்டு வந்து எழுத வசதியா இருக்கும்முல ?” என்றதும் மூர்த்தியை தலையில் தட்டி “வனிதா மிஸ் இப்ப வருவாங்க, நீயே கேளு”என்றான் பூபதி.
“டேய் பூப்ஸ்! உன் ரூட்டு ராதிகா கிட்ட உட்காந்து போன தடவ மாதிரி சொதப்பிடாதடா!” என பூபதியிடம் கைகூப்பினான் மூர்த்தி. அசடு வழிந்த பூபதி “மூர்த்தி.. நம்ம தமிழ் வருவான்ல…அவன புடி, காப்பி அடிக்கரத்துக்கு” என்றான். முகத்தை சுழித்த மூர்த்தி “அவன் சரியான பயந்தாங்கொள்ளி டா! ஷெரின் மிஸ் நம்மள திருத்த அந்த பழப்பயல கடைசி பெஞ்ச்சுல உட்கார வச்சாங்க.. ஆனா இப்பதான் பயல தேத்திகிட்டு இருக்கேன்”
“அடேய்! வேலைய காட்டிட்ட போல” என்று மூர்த்தியை நோக்கி கண்களை சுருக்கினான் பூபதி. “போன வாரம்.. புதுசா..சுட சுட! ஒரு கெட்ட வார்த்த சொல்லி கொடுத்திருக்கேன்.. அதுக்கு என்ன அர்த்தம்..என்ன அர்த்தமுன்னு தினமும் கேட்டு பய துடிப்பா துடிக்கிறான் பாத்துக்க.. சொல்லலயே! சஸ்பென்சுல வச்சிருக்கேன்.. எப்..ப்..பூடி?”என்று பதக்கம் வென்ற பெருமிதம் போல் முடியை கோதினான் மூர்த்தி. தூ! என்று சமிக்ஞை செய்தான் பூபதி.
அச்சோ! வனிதா மிஸ் வந்துட்டாங்க.. தென்றல் தள்ளிய சாரல்களாய் நெற்றிஓர வியர்வை, வழித்து வாரிய கூந்தல், கன்னங்கள் தாங்கி நிற்கும் வட்ட வடிவ கண்ணாடி, பூத்துவிட காத்திருக்கும் சிகப்பு ரோஜா மொட்டாய் புருவங்கள் இடையே குங்குமம், கரிய மையில் நீராடிய இமைகளின் தாளத்திற்கு மெல்லிய நடனம் ஆடும் ஜிமிக்கிகள், மௌனமான குளத்தின் மையத்தில் விழும் மழைத்துளியின் அதிர்வுகளாய் உதட்டின் புன்னகை அவளது முகமெங்கும் படர..சிட்டுப் பறவையாய் வகுப்பறைக்குள் நுழைந்தாள் வனிதா மிஸ். வனிதா மிஸ் வகுப்பின் அனைத்து மாணவ மாணவிகளின் மதிப்பிற்கு உரியவள், லட்சுமியம்சம் கொண்டவள்!
வனிதா மிஸ் கணீர் குரலில் “Morning students! Dhivya, please distribute the test note books to all” என்றதும் தேர்வு தொடங்கியது. மூர்த்தி பல முத்திரைகள் காட்டியும் , கூத்துக்கள் ஆடியும் பூபதி மூர்த்தியை கண்டு கொண்டதாக தெரியவில்லை. தேர்வும் முடிந்தது. “என்ன மூர்த்தி பின்னிட்ட போல” என்று கேட்ட கார்த்தியிடம் தன் கட்டை விரலை உயர்த்தி இலித்தான் மூர்த்தி. எந்த சினிமா கதைய எழுதி வச்சானோன்னு கார்த்தியின் மைன்ட் வாய்ஸ் சந்தேகிக்க “ஆமா! பால்டிவோ புலியை பார்த்ததும் என்ன பண்ணிணார் ?ங்கற கேள்விக்கு என்ன பதில் எழுதின மூர்த்தி? என்று கேட்டான். ” உதட்டை பிதுக்கி சலித்து கொண்ட மூர்த்தி “என்ன பெருசா பண்ணிருக்கப் போறான் ரெண்டு செருப்பையும் கையில எடுத்துக்கினு ஓடிருப்பான்….கார்த்தி, ஒரு தடவ நம்ம ஸ்கூல் முக்குல தீனி விக்கிற ஆயா கிட்டேந்து கொடுக்காப்புளி திருடிட்டு, செருப்ப கழட்டிக்கினு நாம ரெண்டு பேரும் ஓடுனோம்முல..அந்த மாதிரி” ஹி்..ஹி என்று மூர்த்தி சிரித்து, கார்த்தியையும், பூபதியையும் தரையில் புரண்டு சிரிக்க வைத்தான். அடப்பாவி! புலிய கொன்னு உயிர் தியாகம் பண்ணவருடா பால்டிவோ என்று கார்த்தி சொல்லியது ஏதும் கேளாமல், மூர்த்தி காதில் ஒலித்தது பள்ளியின் கடைசி மணி மட்டுமே!
பத்து நாட்கள் கழிந்தன. மற்ற தேர்வுகள் முடிந்து விடைத்தாள்களும் திருத்தப்பட்டு வகுப்பில் மதிப்பெண்களை கூறி டெஸ்டு நோட்டுக்களை கொடுத்து கொண்டிருந்தார் வனிதா மிஸ். “மூர்த்தி ! Show your hands !” என்று உருமியது அவர் குரல். மூர்த்தியின் உள்ளங்கையை பதம் பார்த்தது வனிதா மிஸ்ஸின் ஸ்கேல். காதலன் படம் ஞாபகம் வருதா மூர்த்தி குட்டி என்று கார்த்தி கிசு கிசுத்தான். தனது பூட்ஸ் காலால் கார்த்தியை உதைத்தான் மூர்த்தி. “Get ready to confess..principal is on the way ! “என்று ஓங்கி ஒலித்தது வனிதா மிஸ்ஸின் குரல். கேள்விக்குறியாக மாறிய மூர்த்தியின் முகத்தை பார்த்து “ஒன்னும் இல்லடா..அண்ணாச்சி கடை ஆஃப்பாயில் பத்தி உன்கிட்ட விசாரிக்க principal வராராம்” என்று பூபதியும், கார்த்தியும் மேசைக்கு அடியில் தலையை விட்டு மேசை அதிர குலுங்கி சிரித்தனர். நொடிக்கும் நேரத்தில் வகுப்பில் நடுச்சாம அமைதி. பூனை போல தலையை மெல்ல உயர்த்தினான் பூபதி. வகுப்பில் அனைவரும் நின்றிருந்ததை பூபதி உணர்ந்தான். பிரின்ஸிபால் சலீம் வகுப்பின் ஒரு மேசை மேல் அரசனைப் போல் அமரந்தார். வீமனை போன்ற உருவம், கரிய மீசை, நடையில் ஒரு மிடுக்கு, கர்ஜனையான குரல்..மாணவர்களை நடு நடுங்க வைக்கும் அணுகுமுறை.
“Sit down! Students.. நீங்க சொன்ன பையன் யாரு” என்று சலீம் வனிதா மிஸ்ஸிடம் கேட்டார். மூர்த்தி நடுக்கத்துடன் முன் வந்து நின்றான். “நீ என்ன தப்பு பண்ணினனு நீயே சொல்லு” என்று சலீம கேட்க “சார்”..விரல்களை பிண்ணிக்கொண்டே கூனி நின்றான் மூர்த்தி. சலீம் முகம் சிவந்தது. “Open your mouth.. you loser!”. மூர்த்தியின் இதயம் அவனது சட்டைப்பையில் குதித்து விடும் போல் பன்முக பயங்கொண்டு துடித்தது. மூர்த்தி பேச ஆரம்பித்தான். நெற்றியை மீண்டும் மீண்டும் விரல்களால் தேய்த்தவாறு, “சார்..நான் ஒன்னும் பண்ணல சார்!” “பொய் சொல்லாத!”என்று கண்டித்தார் சலீம். டெஸ்ட் நோட்டில் கேள்விக்கும் பதிலுக்கும் கையெழுத்து வேறுபாடு இருந்ததை மூர்த்தி அறியவில்லை. தான் எவ்வித தப்பும் செய்யாதது போல சலீமின் அனைத்து கேள்விகளுக்கும் பொய்களை அடுக்கிக் கொண்டே போனான் மூர்த்தி. “கையெழுத்து மாறியிருக்கு, ink மாறியிருக்கு, இதை விட முக்கியமா….” என்று சலீம் வனிதா மிஸ்ஸை நோக்கி வருத்தத்துடன் தலையை அசைத்து..”நீ எழுதின பதிலும் தப்பு” என மூர்த்தியிடம் சொன்னார். சில நொடிகள் சலீமின் கண்கள் ஒரு வெறுமையான பார்வையை மூர்த்தி மீது வைத்திருந்தன.
“உண்மைய சொல்லுடா!” என்று சலீமின் கை ஓங்கியது. வயிற்றை கலக்கியது மூர்த்திக்கு.. “சார்..பரிட்சையில் கேட்ட கேள்விக்கு எனக்கு பதில் தெரியல சார்..டெஸ்ட் முடிந்ததும் சப்மிட் பண்ண டெஸ்ட் நோட்ட யாருக்கும் தெரியாம பீரோலேந்து வீட்டுக்கு எடுத்துட்டு போய் பாடத்தை நல்லா படிச்சிட்டு பதில் எழுதினேன் சார்”
“அந்த கையெழுத்து அவன் தங்கையின் கையெழுத்து சார்..she is in 7th class” என்று குறுக்கிட்டது வனிதா மிஸ்ஸின் குரல்.வகுப்பில் மெல்லிய சலசலப்பு நிலவியது. மூர்ததியை பார்த்து காரி துப்புவது போல் பூபதியும், கார்த்தியும் சமிக்ஞை செய்தார்கள். பற்களை கடித்தான் மூர்த்தி. சலீம் பொறுமை இழந்தார்.”He thought that he executed a master plan, but failed.. தப்பு செய்ய என்னென்ன யோசனை, எத்தனை பொய், எத்தனை பித்தலாட்டம்.. .அப்ப…ப்ப்…பப்பா! உன் பெயர் என்னடா?” என்று சலீம் கேட்டதற்கு “மூர்த்தி.. சார்” என்று பதில் சொன்னான் மூர்த்தி . வகுப்பில் முனுமுனுப்பு அதிகரித்தது. என்ன சத்தம் என்று கேட்டார் சலீம். “ஃபுல் நேம்! ஃபுல் நேம்! “என்று கடைசி பெஞ்ச்சிலிருந்து கூச்சல் ஒலித்தது. “What’s your problem man? பெயர்ல கூட பொய்யா? உன் முழு பெயர சொல்லுடா…உன் பெயரை நான் மறக்கவே கூடாதுன்னு நினைக்கிறேன்” என்று சலீமின் ஆள்காட்டி விரல் அவரது நெற்றிப்பொட்டை தட்டி கொண்டே இருந்தது.
“சத்தியமூர்த்தி!!! சார்” என்று அவன் தயக்கத்துடன் பதில் சொன்னான். ‘கொல்’ என்ற சிரிப்பில் வகுப்பே அதிர்ந்தது. சலீமும் வனிதா மிஸ்ஸும் வெடித்து வரும் சிரிப்பை அடக்க முயன்று கொண்டிருந்தார்கள். நம்ம யாருமே இவன் பெயரை மறக்க முடியாது என்று மனதில் நினைத்து கொண்டே வனிதா மிஸ் வகுப்பை விட்டு வெளியேறினார். தலை தாழ்ந்து நின்றான் சத்திய மூர்த்தி.
கடைசி பெஞ்ச்சுக்கு வந்த சத்திய சோதனை!
வசந்த் சுகுமார்
செப்பனிட உதவியவர்கள் – பரணீதரன், ஆர்த்தி வசந்த்.

Fantastic Vasanth
LikeLike
Awesome sir
LikeLike