அகப்பொருள்

சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் காலையில் என் வீட்டின் அருகே உள்ள சிறிய அங்காடிக்குச் சென்றிருந்தேன். பொருட்களை வாங்கி வீட்டில் கொடுத்து வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் வேகமாக பொருட்களை தேடி எடுத்துக் கொண்டிருந்தேன். மூன்று நடுத்தர வயதுள்ள ஆட்கள் கடைக்குள் துரிதத்துடன் நுழைந்தார்கள். நரைமுடிகள் கொஞ்சம் துளிர்த்த தலையுமாய், சீர்ப்படாத தாடியுமாய் இருந்தார்கள்.

“அண்ணா! கப் இருந்தா குடுங்க ணா.. பேப்பர் கப் , பிளாஸ்டிக் கப் ஏதோ ஒன்னு, ப்ளீஸ்..சீக்கிரம் !” என்று அந்த மூவரில் ஒருவர் கேட்க “ இல்லைங்க, கப் எதுவும் இல்ல” என்றார் கடைக்காரர். “அண்ணா.. எதாவது டம்ளர் மாதிரி, கூஜா மாதிரி எதுவா இருந்தாலும் பரவால்ல” .. அவர் மீண்டும் கேட்டார். “நம்ம கிட்ட அந்த ஐடம்லா இல்ல தம்பி” என்று கடைக்காரர் சொன்ன பிறகும் அந்த மூவரில் இருவர் தலைமுடியை கோதிக்கொண்டு , தாடியை சொரிந்த வண்ணம், கம்மலின் திருகாணியை தொலைத்த மங்கையைப் போல செவியில் எதையும் உள்ளிழுக்காமல் கடை முழுவதும் உள்ள அலமாரிகளை ஒரு புரட்டு புரட்டி தேடிக்கொண்டே இருந்தார்கள். மற்றொருவர் கடை வாசலி்ல் நின்ற வண்ணம் நெற்றியை சுருக்கி, விரல்களை இருக்கி இச்சுக்கொட்டி “ ஓ காட்! நம்ம கார்ல ஒரு கப் கூட இல்லயே, பக்கத்துல வேற கடை இருக்குமா” என்று முனுமுனுத்து பரபரப்புடன் சுற்றிப் பார்த்தார். அவர்களது முகங்களில் நித்திரையிழந்த , சோர்வான தோற்றம் இருந்தது. எப்படியாவது இது வேண்டும் , எப்பொழுது கிடைக்கும் என்று அவர்கள் தவிப்பது போல் எனக்குத் தோன்றியது.

அந்த மனிதர்கள் இருந்த நிலையையும் , அவர்கள் கடைக்காரரிடம் பேசியதையும் கவனித்த நான் “ச்சே! என்ன மனுசங்கடா! காலையிலேயே சரக்கு அடிக்க கப் கிடைக்காம இப்பிடி அலையறானுங்க..போதைக்கு இப்படியும் அடிமைகள் இருப்பாங்களா?” என்று வெம்மையான வினா ஒன்றை என்னிடமே கேட்டுக் கொண்டேன். ஒரு நாளின் காலைப் பொழுதில் பெரும்பாலானோர்க்கு வேலைக்கு நேரத்திற்கு செல்ல வேண்டும் , நிறைவு அடையாத பணிகள் நிறைய இருக்கின்றனவே போன்ற எண்ணங்கள் மனதில் அலைமோதிக் கொண்டிருக்க..இந்த மனிதர்கள் காலை நேரத்தை இப்படி கடத்துகிறார்களே! என்று பெருமூச்சு விட்டேன். “ சரி.. இவனுங்க சரக்க அப்படியே குடிச்சு தொலைக்க வேண்டியது தானே.. எதுக்கு ‘கப்’புக்கு இப்பிடி ஏங்குறானுங்க..? ஓ.. மிக்ஸிங்க்கு தேவ படுமோ.. இந்த வேகமும் துடிப்பும் வேறு நல்ல விடயங்களுக்காக வரக்கூடாதா? அட குடிகார ஆசாமிகளா!”என்று என் மனம் விம்மியது.

அத்தருணத்தில் அந்த மூவரில் ஒருவர் அங்காடி ஊழியரிடம் “ இந்த ஆப்போஸிட்ல இருக்கிற டீ கடையில ஒரு பாட்டி நிக்குது பாருங்க..” என்று சொல்ல நானும் கவனித்தேன். குப்பைகளில் தேறுகிற பொருட்களை எடுத்து கிழிந்த சாக்கு ஒன்றில் அது வெடித்து விடும் நிலை வரை சேகரித்து, அதை இழுத்து வர வலுவில்லாத தோய்ந்த உடலுமாய், சுருங்கிய தோலும்; கண்களுமாய் ஒரு கிழவி காட்ச்சியளித்தார். குப்பை சாக்கை விட மிகையாக அவரது மேனி அழுக்குற்றும்; ஆடை கிழிந்தும் இருந்தது. அவர் தொடர்ந்தார் ..அந்த பாட்டி பசிக்குதுன்னு சொல்லுச்சு..சாப்பிட பிஸ்கட் வாங்கி கொடுத்து விட்டு குடிக்க தேநீர் கேட்டால் அந்த டீ மாஸ்டர் “இதுக்கு கிளாஸ்ல டீ குடுத்தா முதலாளி திட்டுவாரு, மத்த கஸ்டமர்ஸ் சத்தம் போடுவாங்க” ன்னு சொல்லிட்டான். பேப்பர் கப் கேட்டா அதுவும் இல்லனு சொல்லிட்டான். அவனோட அப்பன் ,ஆத்தாவா இருந்தா இப்படி செய்வானா?.. அந்த பாட்டிக்கு தான் கப் தேடிட்டு இருக்கோம் என்று சொன்னார்.

இந்த சமூகத்தில் ஒரு சாமானியரின் பசி எச்சில் கிளாஸிடம் தோற்றுப் போனது!

அவர்கள் பேசியது அனைத்தையும் கேட்ட பிறகு தாய்மொழியை வாசிக்க தெரியாவதனைப் போல் வெட்கித் தலை குனிந்தேன். கடைக்காரரிடம் பணத்தை செலுத்தி விட்டு வெளியே சென்று என் வாகனத்தில் அமர்ந்தேன். என்னைச் சுற்றி போக்குவரத்து நெரிசலின் பெரிதொலித்தல் இருந்தாலும் அடர்ந்த காட்டின் நடுவே தனிமையில் உட்கார்ந்திருப்பது போல் உணர்ந்தேன். தென்றல் தழுவாத ஒரு வெற்றிடத்தின் அமைதி என் மனதைத் தழுவியது. இயற்கையும் நானும் மட்டுமே அறிந்த அவமானத்தை உட்கொண்டு வண்டியை மெல்ல உருட்டினேன்.சக மனிதர்களை, உறவுகளை வியூகிக்கின்றோம். சில நொடிகளில் மற்றவரின் சொல், செயல், எண்ணங்களை தராசிலிட்டு உறுதியும் செய்கின்றோம். எங்கோ, யாரோ சிலர் செய்த அற்ப செயல்களை பார்த்தோ, அறிந்தோ நம் மனம் மற்ற மனிதர்களை வியூகம் செய்ய தொடங்குகின்றது. நாம் எப்பொழுதும் நல்லவர்கள் தான் என்று நல்லவனுக்கு ஒரு அசத்தியமான வரையறை செய்து அதில் உள்ளடங்கி வாழ்கின்றோம். மேற்சொன்னது போன்ற நிகழ்வுகள் இது போன்ற உண்மைக்கு புறம்பான வரையறைகளை உடைத்தெரிகின்றது, நம்மை செப்பனிட உதவுகிறது.

சிறிதளவும் யோசிக்காமல் அந்த மனிதர்களின் மனங்களில் மென்மையான கண்ணாடிப் பொருளாய் இருந்த எண்ணங்களின் மதிப்பறியாமல் நான் சிதறல்கள் ஆயிரமாய் நொருக்கியது எவ்வளவு தவறு என்றெண்ணி என் மனம் மண்டியது. சமூகத்தின் திணிப்பால் மனிதனின் மனம் நொடிக்கும் குறைவான நேரத்தில் சக மனிதர்களை வியூகிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. அதுவன்று திறன். இது போன்று மற்றவரின் களங்கமற்ற மனங்களை உதாசீனப் படுத்தும் பண்பு , மனிதத்தை தக்கவைக்கும் சூழலை ஏற்ப்படுத்துவதன்று.. நான் சந்தித்த அந்த மூன்று மனிதர்களின் சொல் மற்றும் செயல்களுக்கான“அகப்பொருள்” விலைமதிப்பற்றது.

வசந்த் சுகுமார்

செப்பனிட உதவியவர்கள்: பரணீதரன், ஆர்த்தி வசந்த்.

Published by vasanth sukumar

Anaesthesiologist, nature lover, book lover, budding writer

4 thoughts on “அகப்பொருள்

  1. Mind blowing one .. worth to read .. I thought most of d time v assume others r wrong .. மெய்ப்பொருள் காண்பது அறிவு

    Like

Leave a reply to பிரபுராம் நிரஞ்சன் Cancel reply