முதல் மைல்கல்

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சராசரி நாள், நண்பர்கள் நாங்கள் மூவரும் திருச்சியில் சந்தித்தோம். 11ஆம் வகுப்பு, படிப்பு சுமை குறைவு; மாலை வேலைகளில் இவ்வாறு சந்திப்பது வழக்கம். “கோவிலுக்கு போய் வந்தாச்சு, கொஞ்ம் தீனி கொறித்து அளவில்லா அரட்டையும் அடிச்சாச்சு! சரிடா.. எல்லாம் கிளம்புவோமா!” என்று விடை பெற..நாங்கள் நடந்து வந்த பாதையில் என் நண்பன் ஶ்ரீராம் காலில் தட்டியது ஒரு பொருள். தெரு விளக்கின் மங்கிய ஒளியில் அது என்னவென்று அறிய மூவருக்கும் ஆர்வம். “ஏதோ ஒன்னு கீழ கிடக்குடா”.. அதை கால்பந்து போல் தட்டி ஶ்ரீராம் முன்னேறிய போது அறிந்தோம் “ டேய்! பர்ஸ் டா!”. சில நொடிகள் பதட்டமும் மௌனமும் சூழ்ந்தது.

“இப்போ என்னடா பன்னுறது”. . என்று எண்ணி முடிக்காத நிலையில் என் நண்பன் அந்த பர்ஸை கையில் எடுத்தான். “ உள்ள பைசா இருக்கு, போட்டோவும் அதுக்கு பின்னாடி முகவரியும் இருக்குடா.. எனக்கு நேரம் ஆச்சு! நான் வீட்டுக்கு கிளம்புறேன்..பேசாம இந்த பணத்தை உண்டியல்ல போட்டுறுங்கடா..” என்று சொல்லி பேருந்தில் ஏறினான் ஶ்ரீராம். கையில் அந்த பணப்பையுடன் நானும் மற்றொரு நண்பன் வசந்த்தும் நடந்து கொண்டே பேருந்து நிறுத்தம் வரை மட்டுமே கிடைத்த சில நமிடங்களில் ஒரு தீர்வு கண்டோம். வசந்த் சொன்னான் “பாருடா இந்த பைய நம்ம கையில குடுத்துட்டு ஓடிட்டான்..இத எடுக்காமலே விட்டுருக்கலாம்..ம்ம்ம்..சரி! நமக்கு நாளைக்கு லீவ் தானே ! இந்த பர்ஸ நேரா போய் குடுத்துட்டா?.

நான் சற்று யோசித்தேன். “பாட்டி வீட்டுல என்ன பொய் சொல்லலாம்?”. அந்த பணப்பையின் சொந்தக்காரரின் முகவரி ஜீயபுரம், திருச்சியில் இருந்து குளித்தலை செல்லும் வழியில் உள்ள ஒரு ஊர். “அப்போ முக்கம்பூக்கு ( அதே வழியில் உள்ள சிறிய சுற்றுலா தளம்) நண்பனோட போரேன்னு கொளுத்தி போடுவோம்!” என்று நான் முனுமுனுத்து கொண்டேன். “ சரி டா! நாளைக்கு காலையில பத்து மணிக்கு கிளம்புவோம், சத்திரம் வந்துடு” என்று உரையாடலை முடித்து இருவரும் அவரவர் வீட்டிற்க்கு திரும்பினோம். மறுநாள் நண்பன் வசந்த்துடன் பேருந்து பயணம் தொடங்கியது. அன்று “பொன்னியின் செல்வன்” படித்திருக்கவில்லையே என்ற ஏக்கம் இன்று உள்ளது. கல்கியின் காவிரி கரை பற்றிய தனித்துவமான வரிகள் அந்த பயணத்தை மேலும் சிறப்புற்றிருக்க செய்யும் அல்லவா?. ஜீயபுரம் வந்தடைந்தோம். சிறிய ஊராக தென்பட்டது. கண்களுக்கு எட்டிய வரை ஒரு மிதிவண்டி கடை தெரிந்தது. அங்கே சென்று ” அண்ணா ! இந்த அட்ரஸுக்கு எப்படி போனும்” என்றதும் அவர் வழி சொல்ல ,பிறகு புரிந்தது சற்று தொலைவு என்று. அவரிடமே வாடகைக்கு மிதிவண்டி கேட்டோம். ” புது ஆளுக்கு எப்படிப்பா வண்டி குடுக்கறது?.. அண்ணா இது என்னோட பள்ளி அடையாள அட்டை..இத வெச்சுகிட்டு கொடுங்க “என்று என் நண்பன் சொன்னான்.

மிதிவண்டி மெல்ல நகர்ந்தது. பச்சை நிற வயல்வெளியும், ஆங்காங்கே சறிய ஓட்டு வீடுகளும், குடிசைகளும் காட்சியளித்தன. ஏதோ ஒரு புதுவித மகிழ்ச்சி மனதில் துள்ளி குதித்தது. முகவரியை சிலரிடம் கேட்டு அவர் வீட்டை நெருங்கினோம். வாசலில் ஒரு இளைஞர் ” யார் வேணும்” என்றதும் நாங்கள் விவரிக்க அந்த இளைஞர் முகத்தில் இணையில்லா மலர்ச்சி..அவர் நாங்கள் தேடி வந்த நபரின் அண்ணன். அவரிடம் அந்த பணப்பையை கொடுத்து சரி பார்க்க கேட்டுக்கொண்டோம்.எங்களை வீட்டிற்குள் அழைத்து சென்றார். அங்கிருந்த கயிற்று கட்டிலில் அமர்ந்தோம். சற்றே நிமிர்ந்து பார்த்தால் சூரிய ஒளி பல துளைகளில் எட்டி பார்த்தது..நிரந்தரமாய் காணாமல் போன ஓடுகள்!. “கலர் குடிங்க கன்னு” என்று அந்த நபரின் அம்மா தன் கையில் இரு குளிர்பானங்களுடன் நின்றார்.. “என் பையன் இப்போ வீட்டுல இல்லாம போயிட்டான்.. ராவெல்லாம் பொலம்பிகிட்டு கிடந்தான்..இப்ப கூட திருச்சிக்கு அவன் பர்ஸ தேடிதான் போயிருக்கான்! அவர் பெருமூச்சில் நிறைவையும்,கண்களில் ஆனந்தத்தையும் என்னால் உணர முடிந்தது. குளிர்பானம் அருந்தி புன்னகையுடன் விடை பெற்றோம்.

அந்த பணப்பையில் இருந்தது நூற்று அறுபத்து ரூபாய், அதை தொலைத்த இளைஞனின் ஒரு வார சம்பளம். அன்று அந்த பணத்தின் மதிப்பை நான் அறிந்திருக்கவில்லை. செய்த உதவியின் மதிப்பை நன்கு அறிந்தோம். “ இந்த சின்ன உதவிய செஞ்சா இப்படி ஒரு சந்தோசம் அவங்களுக்கும் நமக்கும் ஏற்படுமா? இதில் என்னவோ ஒரு ஆழ்ந்த பொருள் உள்ளது?”..என்று எண்ணிய படி நண்பனுடன் வீட்டிற்க்கு திரும்பினேன்.

நான் இங்கு செய்த பதிவு, நாம் இதுவரை கேள்விப்படாத விசயமாக இருக்க இயலாது. பள்ளிப்பருவம்; வாழ்க்கையின் அறிதல், சமூகத்தின் மீது அக்கறை, இவை ஏதும் அறியாமல், பள்ளி, பாட்டி வீடு, நண்பர்கள் என்று கனமற்ற சிறகாய் பறந்த காலத்தில் இந்த நிகழ்வு என் மனதில் ஏற்படுத்திய உருக்கம் குறிப்பிடத்தக்கது !

“ அறம்” என்ற சொல்லின் புரிதலுக்கான முதல் மைல்கல் ! 🙂

வசந்த் சுகுமார்

செப்பனிட உதவியவர்கள்: பரணீதரன், ஆர்த்தி வசந்த்.

Published by vasanth sukumar

Anaesthesiologist, nature lover, book lover, budding writer

7 thoughts on “முதல் மைல்கல்

  1. அடித்த அரட்டை, கொறித்த தீனி, கொளுத்திப் போட்ட சிறிய பொய், நண்பனுடன் சுற்றுலா, உழைத்து உருவாக்கிய பணத்தை இழந்தவரின் பதைபதைப்பு, பணம் கிட்டியதும் கிட்டிய மகிழ்ச்சி என எண்ணற்ற உணர்வுகளின் “உயிரோட்டம்” உங்கள் “அறம் என்ற மைல்கல்”.

    Liked by 1 person

  2. அருமையான எதார்த்தமான உணர்வுகள் உங்கள் எழுத்தில் பிரதிபளிக்கின்றது, பாத்திரங்களோடு வன்றுபட வைப்பதே எழுத்தின் மகிமை,வாழ்த்துக்கள் வசந்த்,அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்

    Like

Leave a reply to Rishi Cancel reply