வரம்

ஐந்தாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறைக்காக திருச்சியில் உள்ள பாட்டி வீட்டிற்கு செல்ல அம்மா, அண்ணணுடன் நான் பேருந்து நிலையத்திற்கு சென்றேன். பள்ளிக் காலத்தில் பேருந்து பயணம் என்றாலே அத்தனை சிறப்பு. அன்று ஒருபுறம், அமைச்சர்கள் கட்சி பதவிகள் அறிவிப்பிற்காக பித்துப்பிடித்த நிலையில் காத்திருப்பது போல நான் ஜன்னல் ஓர இருக்கைக்காக காத்திருக்க.. மறுபுறம், உப்பும் மிளகாய் பொடியும் தூவிய வெள்ளரிக்காய்! காகிதக் கூம்பு பொட்டலத்தில் கைகளுக்கு இதமான சூட்டுடன் கிடைக்கும் கடலை! , மணப்பாறை முறுக்கு!..இவை எல்லாம் விற்றுக் கொண்டு வருவார்களே என்ற ஏக்கத்தில் இருந்தேன்.

புறப்படத் தயாரான நிலையில் உள்ள பேருந்தில் விரைவாக ஏறினேன். கனவுகள் சிதறியது. “ அம்மா! இடமே இல்ல மா! நம்ம வேற பஸ்ல போகலாம்” என்றதும் அம்மா மறுக்க..நின்று கொண்டே துயரத்துடன் பயணம் தொடங்கியது. அடுத்த நிறுத்தத்தில் சற்று நெரித்தல் குறைந்தது. “ வா தம்பி! உட்காரு” என்று அழைத்தார் ஒருவர். நடுத்தர வயது, பெரிய உருவம், சேதமடைந்த வர்ண தூரிகை போல மீசை, முகத்தில் ஆங்காங்கே கருந்தழும்புகள், சுருள் சுருளாகவும் பஞ்சு மிட்டாய் போலவும் தலை முடி! ( Afro hair style). ஒட்டு மொத்தமாக அந்த மனிதரை பார்க்கையில்..90 களில் தமிழ் திரைப்படங்களில் கொடிய வில்லனின் உத்தரவை “எஸ் பாஸ்!” என ஏற்கும் அடியாட்களில், கட்டாயம் ஒரு ஆப்பிரிக்கா தலையன் இருப்பான்அல்லவா?..அவன் போலவே எனக்கு தோன்றியது. அம்மா சொன்னாலும், பீதியுடனே அவர் அருகே அமர்ந்தேன். இந்த ஆளு எதுக்கு என்னையே பாத்துக்கிட்டு இருக்காரு? என்று நினைத்தேன். தம்பி ! உன் பெயர் என்ன? என ஆரம்பித்து பல கேள்விகள் தொடர்ந்தது, அனைத்திற்கும் ஒரு வார்த்தை பதில்களாக சொல்லி கொண்டே இருந்த எனக்கு “என்ன ஸ்டாண்டர்ட் படிக்கிற?” என்று அவர் என்னிடம் கேட்டதும் புது ஆளுங்க கிட்ட விவரங்கள் எல்லாம் சொல்லக் கூடாதுன்னு அம்மா சொன்னது ஞாபகம் வந்தது. “ஏழாம் வகுப்பு படிக்கிறேன்னு பொய் சொல்லிட்டா..இவன் பெரிய பையன், இவன் கிட்ட எந்த வம்பும் வச்சிக்க கூடாது பா! அப்படின்னு அந்த ஆளு நினைச்சிடுவாரு” என்று எண்ணியது போலவே பதில் சொல்லிவிட்டு மகிழ்ந்து கொண்டேன்.

சிறிது நேரம் கழிந்தது. அவர் தன் சட்டைப் பையில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து.. உரத்த குரலில்“ இதோ பாத்தியா!..இவரு தான் எங்க தலைவரு ! என்று சுட்டி காட்டினார்.. அந்த புகைப்படத்தைப் பார்த்ததும் எனது இதயம் பல முறை வேகமாக துடித்தது! நெற்றியில் வியர்வைத் துளிகளின் நெருடலை உணர்ந்தேன். “ இந்த ஆளு மண்டையும் அந்த போட்டோல உள்ளவரின் மண்டையும் ஒரே மாதிரி இருக்கே !…இவங்க யாரு? புள்ள புடிக்கறவங்களா?” என்று நினைத்துப் பதறினேன்.“ யாரையோ போட்டோல காட்டி தலைவரு” ன்னு சொல்லுறாரு, ஊரு; பெயர் எல்லாம் கேட்டாரு… ஐயோ! இந்த ஆளு கொடுத்த கடலைய வேற சாப்பிட்டுட்டேனே?!.. எனக்கு இருந்த ஐயத்தை உறுதி செய்தேன். இந்த தடியன்.. நிச்சயம் என்ன கடத்தப் போறான்! மயக்கம் வரத்துக்குள்ள அம்மா கிட்ட ஓடிறனும்!..என்று, அச்சத்தில் பல கோணங்களில் எண்ணத் தொடங்கினேன். உடனே அம்மாவை தேடினேன், கூட்டத்தில் காண இயலவில்லை. சில நொடிகளில் அடுத்த நிறுத்தம் வந்தது.பாய்ந்து ஓடி அம்மாவின் அருகிலேயே கிடைத்த இடத்தில் உட்கார்ந்தேன். ஏதும் சொல்லாமல் அம்மாவின் மடியில் சற்று இளைப்பாறினேன்.

திருச்சியில் பேருந்தில் இருந்து இறங்கும் பொழுது அந்த மனிதரின் இருக்கை வெற்றிடமாக இருந்ததை உறுதி செய்த பின் தூவானத்தில் ஆடுவது போல் மகிழ்வுடன் பாட்டி வீட்டிற்கு சென்றேன். பாட்டி செய்த தின்பண்டங்களின் தூண்டலால் எனது சுவையின் உயர் மையம் கலங்கிப் போக!..இந்த நிகழ்வின் அச்சுறுத்தல் என் நினைவை விட்டு நீங்கியது. சில வருடங்களுக்குப் பின் ஒரு நாள் தொலைக்காட்சி மற்றும் நாளிதழில், அன்று அந்த நபர் காட்டிய புகைப்படத்தில் இருந்த மனிதரைப் பார்த்தேன்..”அட! அந்த ஆசாமியே தான்! அன்று பார்த்த அதே முழுநீள காவி உடை, சுருட்டை முடி!..”அம்மாவிடம் அவர் யார் என்று கேட்டதும் “இவரு ஒரு சாமியார் டா! என்று சொன்னார். பிறகு அவர் ஒரு பிரபலமான “ஆன்மீக குரு” என்றும் அவரது நிறுவனம் பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல் படுத்தி வருகிறது என்றும் அறிந்தேன்!.. பேருந்தில் என்னுடன் பயணம் செய்த அந்த நபர் இந்த ஆன்மீக குருவைப் பின்பற்றுபவராக இருந்திருக்க வேண்டும் !.. “என்னக் கொடுமை சரவணன்!!!”. சிறு வயதின் அறியாமையும், தற்செயலாக நடந்த நிகழ்வுகளும் அன்று மனதில் எத்தனைத் திருவிளையாடல்கள் செய்திருக்கின்றன என்றெண்ணி நான் இன்றும் சிரிப்பது உண்டு. மேலும் ஒரு மனிதனின் தோற்றத்தை வைத்து அவரை பற்றி தவறாக எண்ணியதை நினைத்து வருந்துவதும் உண்டு.

என்றாலும் “ பத்து வயசு பையன்கிட்ட ..ஒரு ஆன்மீக குருவை இப்படியா ஒரு மனுசன் அறிமுகப்படுத்துவார்?” என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. நம் சிறு வயதில்… “அறியாமை” என்ற ஒன்று , மேற்ச்சொன்ன நிகழ்வு போன்ற புரியாத அச்சங்கள் சிலவற்றை கொடுத்து, பின்நாளில் அவற்றையே மலரும் நினைவுகளாக மாற்றியதோடு அல்லாமல், எண்ணற்ற தருணங்களில் .. “ ஒரு இனிமையான, கவலை அறியாத, எல்லைகளற்ற உலகத்தை வரமாக அளித்துள்ளது.

அறியாமை ஒரு “வரம்”

வசந்த் சுகுமார்

செப்பனிட உதவியவர்கள்: பரணீதரன், ஆர்த்தி வசந்த்.

முதல் மைல்கல்

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சராசரி நாள், நண்பர்கள் நாங்கள் மூவரும் திருச்சியில் சந்தித்தோம். 11ஆம் வகுப்பு, படிப்பு சுமை குறைவு; மாலை வேலைகளில் இவ்வாறு சந்திப்பது வழக்கம். “கோவிலுக்கு போய் வந்தாச்சு, கொஞ்ம் தீனி கொறித்து அளவில்லா அரட்டையும் அடிச்சாச்சு! சரிடா.. எல்லாம் கிளம்புவோமா!” என்று விடை பெற..நாங்கள் நடந்து வந்த பாதையில் என் நண்பன் ஶ்ரீராம் காலில் தட்டியது ஒரு பொருள். தெரு விளக்கின் மங்கிய ஒளியில் அது என்னவென்று அறிய மூவருக்கும் ஆர்வம். “ஏதோ ஒன்னு கீழ கிடக்குடா”.. அதை கால்பந்து போல் தட்டி ஶ்ரீராம் முன்னேறிய போது அறிந்தோம் “ டேய்! பர்ஸ் டா!”. சில நொடிகள் பதட்டமும் மௌனமும் சூழ்ந்தது.

“இப்போ என்னடா பன்னுறது”. . என்று எண்ணி முடிக்காத நிலையில் என் நண்பன் அந்த பர்ஸை கையில் எடுத்தான். “ உள்ள பைசா இருக்கு, போட்டோவும் அதுக்கு பின்னாடி முகவரியும் இருக்குடா.. எனக்கு நேரம் ஆச்சு! நான் வீட்டுக்கு கிளம்புறேன்..பேசாம இந்த பணத்தை உண்டியல்ல போட்டுறுங்கடா..” என்று சொல்லி பேருந்தில் ஏறினான் ஶ்ரீராம். கையில் அந்த பணப்பையுடன் நானும் மற்றொரு நண்பன் வசந்த்தும் நடந்து கொண்டே பேருந்து நிறுத்தம் வரை மட்டுமே கிடைத்த சில நமிடங்களில் ஒரு தீர்வு கண்டோம். வசந்த் சொன்னான் “பாருடா இந்த பைய நம்ம கையில குடுத்துட்டு ஓடிட்டான்..இத எடுக்காமலே விட்டுருக்கலாம்..ம்ம்ம்..சரி! நமக்கு நாளைக்கு லீவ் தானே ! இந்த பர்ஸ நேரா போய் குடுத்துட்டா?.

நான் சற்று யோசித்தேன். “பாட்டி வீட்டுல என்ன பொய் சொல்லலாம்?”. அந்த பணப்பையின் சொந்தக்காரரின் முகவரி ஜீயபுரம், திருச்சியில் இருந்து குளித்தலை செல்லும் வழியில் உள்ள ஒரு ஊர். “அப்போ முக்கம்பூக்கு ( அதே வழியில் உள்ள சிறிய சுற்றுலா தளம்) நண்பனோட போரேன்னு கொளுத்தி போடுவோம்!” என்று நான் முனுமுனுத்து கொண்டேன். “ சரி டா! நாளைக்கு காலையில பத்து மணிக்கு கிளம்புவோம், சத்திரம் வந்துடு” என்று உரையாடலை முடித்து இருவரும் அவரவர் வீட்டிற்க்கு திரும்பினோம். மறுநாள் நண்பன் வசந்த்துடன் பேருந்து பயணம் தொடங்கியது. அன்று “பொன்னியின் செல்வன்” படித்திருக்கவில்லையே என்ற ஏக்கம் இன்று உள்ளது. கல்கியின் காவிரி கரை பற்றிய தனித்துவமான வரிகள் அந்த பயணத்தை மேலும் சிறப்புற்றிருக்க செய்யும் அல்லவா?. ஜீயபுரம் வந்தடைந்தோம். சிறிய ஊராக தென்பட்டது. கண்களுக்கு எட்டிய வரை ஒரு மிதிவண்டி கடை தெரிந்தது. அங்கே சென்று ” அண்ணா ! இந்த அட்ரஸுக்கு எப்படி போனும்” என்றதும் அவர் வழி சொல்ல ,பிறகு புரிந்தது சற்று தொலைவு என்று. அவரிடமே வாடகைக்கு மிதிவண்டி கேட்டோம். ” புது ஆளுக்கு எப்படிப்பா வண்டி குடுக்கறது?.. அண்ணா இது என்னோட பள்ளி அடையாள அட்டை..இத வெச்சுகிட்டு கொடுங்க “என்று என் நண்பன் சொன்னான்.

மிதிவண்டி மெல்ல நகர்ந்தது. பச்சை நிற வயல்வெளியும், ஆங்காங்கே சறிய ஓட்டு வீடுகளும், குடிசைகளும் காட்சியளித்தன. ஏதோ ஒரு புதுவித மகிழ்ச்சி மனதில் துள்ளி குதித்தது. முகவரியை சிலரிடம் கேட்டு அவர் வீட்டை நெருங்கினோம். வாசலில் ஒரு இளைஞர் ” யார் வேணும்” என்றதும் நாங்கள் விவரிக்க அந்த இளைஞர் முகத்தில் இணையில்லா மலர்ச்சி..அவர் நாங்கள் தேடி வந்த நபரின் அண்ணன். அவரிடம் அந்த பணப்பையை கொடுத்து சரி பார்க்க கேட்டுக்கொண்டோம்.எங்களை வீட்டிற்குள் அழைத்து சென்றார். அங்கிருந்த கயிற்று கட்டிலில் அமர்ந்தோம். சற்றே நிமிர்ந்து பார்த்தால் சூரிய ஒளி பல துளைகளில் எட்டி பார்த்தது..நிரந்தரமாய் காணாமல் போன ஓடுகள்!. “கலர் குடிங்க கன்னு” என்று அந்த நபரின் அம்மா தன் கையில் இரு குளிர்பானங்களுடன் நின்றார்.. “என் பையன் இப்போ வீட்டுல இல்லாம போயிட்டான்.. ராவெல்லாம் பொலம்பிகிட்டு கிடந்தான்..இப்ப கூட திருச்சிக்கு அவன் பர்ஸ தேடிதான் போயிருக்கான்! அவர் பெருமூச்சில் நிறைவையும்,கண்களில் ஆனந்தத்தையும் என்னால் உணர முடிந்தது. குளிர்பானம் அருந்தி புன்னகையுடன் விடை பெற்றோம்.

அந்த பணப்பையில் இருந்தது நூற்று அறுபத்து ரூபாய், அதை தொலைத்த இளைஞனின் ஒரு வார சம்பளம். அன்று அந்த பணத்தின் மதிப்பை நான் அறிந்திருக்கவில்லை. செய்த உதவியின் மதிப்பை நன்கு அறிந்தோம். “ இந்த சின்ன உதவிய செஞ்சா இப்படி ஒரு சந்தோசம் அவங்களுக்கும் நமக்கும் ஏற்படுமா? இதில் என்னவோ ஒரு ஆழ்ந்த பொருள் உள்ளது?”..என்று எண்ணிய படி நண்பனுடன் வீட்டிற்க்கு திரும்பினேன்.

நான் இங்கு செய்த பதிவு, நாம் இதுவரை கேள்விப்படாத விசயமாக இருக்க இயலாது. பள்ளிப்பருவம்; வாழ்க்கையின் அறிதல், சமூகத்தின் மீது அக்கறை, இவை ஏதும் அறியாமல், பள்ளி, பாட்டி வீடு, நண்பர்கள் என்று கனமற்ற சிறகாய் பறந்த காலத்தில் இந்த நிகழ்வு என் மனதில் ஏற்படுத்திய உருக்கம் குறிப்பிடத்தக்கது !

“ அறம்” என்ற சொல்லின் புரிதலுக்கான முதல் மைல்கல் ! 🙂

வசந்த் சுகுமார்

செப்பனிட உதவியவர்கள்: பரணீதரன், ஆர்த்தி வசந்த்.