ஐந்தாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறைக்காக திருச்சியில் உள்ள பாட்டி வீட்டிற்கு செல்ல அம்மா, அண்ணணுடன் நான் பேருந்து நிலையத்திற்கு சென்றேன். பள்ளிக் காலத்தில் பேருந்து பயணம் என்றாலே அத்தனை சிறப்பு. அன்று ஒருபுறம், அமைச்சர்கள் கட்சி பதவிகள் அறிவிப்பிற்காக பித்துப்பிடித்த நிலையில் காத்திருப்பது போல நான் ஜன்னல் ஓர இருக்கைக்காக காத்திருக்க.. மறுபுறம், உப்பும் மிளகாய் பொடியும் தூவிய வெள்ளரிக்காய்! காகிதக் கூம்பு பொட்டலத்தில் கைகளுக்கு இதமான சூட்டுடன் கிடைக்கும் கடலை! , மணப்பாறை முறுக்கு!..இவை எல்லாம் விற்றுக் கொண்டு வருவார்களே என்ற ஏக்கத்தில் இருந்தேன்.
புறப்படத் தயாரான நிலையில் உள்ள பேருந்தில் விரைவாக ஏறினேன். கனவுகள் சிதறியது. “ அம்மா! இடமே இல்ல மா! நம்ம வேற பஸ்ல போகலாம்” என்றதும் அம்மா மறுக்க..நின்று கொண்டே துயரத்துடன் பயணம் தொடங்கியது. அடுத்த நிறுத்தத்தில் சற்று நெரித்தல் குறைந்தது. “ வா தம்பி! உட்காரு” என்று அழைத்தார் ஒருவர். நடுத்தர வயது, பெரிய உருவம், சேதமடைந்த வர்ண தூரிகை போல மீசை, முகத்தில் ஆங்காங்கே கருந்தழும்புகள், சுருள் சுருளாகவும் பஞ்சு மிட்டாய் போலவும் தலை முடி! ( Afro hair style). ஒட்டு மொத்தமாக அந்த மனிதரை பார்க்கையில்..90 களில் தமிழ் திரைப்படங்களில் கொடிய வில்லனின் உத்தரவை “எஸ் பாஸ்!” என ஏற்கும் அடியாட்களில், கட்டாயம் ஒரு ஆப்பிரிக்கா தலையன் இருப்பான்அல்லவா?..அவன் போலவே எனக்கு தோன்றியது. அம்மா சொன்னாலும், பீதியுடனே அவர் அருகே அமர்ந்தேன். இந்த ஆளு எதுக்கு என்னையே பாத்துக்கிட்டு இருக்காரு? என்று நினைத்தேன். தம்பி ! உன் பெயர் என்ன? என ஆரம்பித்து பல கேள்விகள் தொடர்ந்தது, அனைத்திற்கும் ஒரு வார்த்தை பதில்களாக சொல்லி கொண்டே இருந்த எனக்கு “என்ன ஸ்டாண்டர்ட் படிக்கிற?” என்று அவர் என்னிடம் கேட்டதும் புது ஆளுங்க கிட்ட விவரங்கள் எல்லாம் சொல்லக் கூடாதுன்னு அம்மா சொன்னது ஞாபகம் வந்தது. “ஏழாம் வகுப்பு படிக்கிறேன்னு பொய் சொல்லிட்டா..இவன் பெரிய பையன், இவன் கிட்ட எந்த வம்பும் வச்சிக்க கூடாது பா! அப்படின்னு அந்த ஆளு நினைச்சிடுவாரு” என்று எண்ணியது போலவே பதில் சொல்லிவிட்டு மகிழ்ந்து கொண்டேன்.
சிறிது நேரம் கழிந்தது. அவர் தன் சட்டைப் பையில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து.. உரத்த குரலில்“ இதோ பாத்தியா!..இவரு தான் எங்க தலைவரு ! என்று சுட்டி காட்டினார்.. அந்த புகைப்படத்தைப் பார்த்ததும் எனது இதயம் பல முறை வேகமாக துடித்தது! நெற்றியில் வியர்வைத் துளிகளின் நெருடலை உணர்ந்தேன். “ இந்த ஆளு மண்டையும் அந்த போட்டோல உள்ளவரின் மண்டையும் ஒரே மாதிரி இருக்கே !…இவங்க யாரு? புள்ள புடிக்கறவங்களா?” என்று நினைத்துப் பதறினேன்.“ யாரையோ போட்டோல காட்டி தலைவரு” ன்னு சொல்லுறாரு, ஊரு; பெயர் எல்லாம் கேட்டாரு… ஐயோ! இந்த ஆளு கொடுத்த கடலைய வேற சாப்பிட்டுட்டேனே?!.. எனக்கு இருந்த ஐயத்தை உறுதி செய்தேன். இந்த தடியன்.. நிச்சயம் என்ன கடத்தப் போறான்! மயக்கம் வரத்துக்குள்ள அம்மா கிட்ட ஓடிறனும்!..என்று, அச்சத்தில் பல கோணங்களில் எண்ணத் தொடங்கினேன். உடனே அம்மாவை தேடினேன், கூட்டத்தில் காண இயலவில்லை. சில நொடிகளில் அடுத்த நிறுத்தம் வந்தது.பாய்ந்து ஓடி அம்மாவின் அருகிலேயே கிடைத்த இடத்தில் உட்கார்ந்தேன். ஏதும் சொல்லாமல் அம்மாவின் மடியில் சற்று இளைப்பாறினேன்.
திருச்சியில் பேருந்தில் இருந்து இறங்கும் பொழுது அந்த மனிதரின் இருக்கை வெற்றிடமாக இருந்ததை உறுதி செய்த பின் தூவானத்தில் ஆடுவது போல் மகிழ்வுடன் பாட்டி வீட்டிற்கு சென்றேன். பாட்டி செய்த தின்பண்டங்களின் தூண்டலால் எனது சுவையின் உயர் மையம் கலங்கிப் போக!..இந்த நிகழ்வின் அச்சுறுத்தல் என் நினைவை விட்டு நீங்கியது. சில வருடங்களுக்குப் பின் ஒரு நாள் தொலைக்காட்சி மற்றும் நாளிதழில், அன்று அந்த நபர் காட்டிய புகைப்படத்தில் இருந்த மனிதரைப் பார்த்தேன்..”அட! அந்த ஆசாமியே தான்! அன்று பார்த்த அதே முழுநீள காவி உடை, சுருட்டை முடி!..”அம்மாவிடம் அவர் யார் என்று கேட்டதும் “இவரு ஒரு சாமியார் டா! என்று சொன்னார். பிறகு அவர் ஒரு பிரபலமான “ஆன்மீக குரு” என்றும் அவரது நிறுவனம் பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல் படுத்தி வருகிறது என்றும் அறிந்தேன்!.. பேருந்தில் என்னுடன் பயணம் செய்த அந்த நபர் இந்த ஆன்மீக குருவைப் பின்பற்றுபவராக இருந்திருக்க வேண்டும் !.. “என்னக் கொடுமை சரவணன்!!!”. சிறு வயதின் அறியாமையும், தற்செயலாக நடந்த நிகழ்வுகளும் அன்று மனதில் எத்தனைத் திருவிளையாடல்கள் செய்திருக்கின்றன என்றெண்ணி நான் இன்றும் சிரிப்பது உண்டு. மேலும் ஒரு மனிதனின் தோற்றத்தை வைத்து அவரை பற்றி தவறாக எண்ணியதை நினைத்து வருந்துவதும் உண்டு.
என்றாலும் “ பத்து வயசு பையன்கிட்ட ..ஒரு ஆன்மீக குருவை இப்படியா ஒரு மனுசன் அறிமுகப்படுத்துவார்?” என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. நம் சிறு வயதில்… “அறியாமை” என்ற ஒன்று , மேற்ச்சொன்ன நிகழ்வு போன்ற புரியாத அச்சங்கள் சிலவற்றை கொடுத்து, பின்நாளில் அவற்றையே மலரும் நினைவுகளாக மாற்றியதோடு அல்லாமல், எண்ணற்ற தருணங்களில் .. “ ஒரு இனிமையான, கவலை அறியாத, எல்லைகளற்ற உலகத்தை வரமாக அளித்துள்ளது.
அறியாமை ஒரு “வரம்”
வசந்த் சுகுமார்
செப்பனிட உதவியவர்கள்: பரணீதரன், ஆர்த்தி வசந்த்.

Ignorance is bliss என்று எங்கள்
பள்ளி ஆங்கில ஆசிரியர் எங்களின் அறியாமையால் விளையும் சேட்டைகளைக் கிண்டல் செய்வதுண்டு… அப்போது பெரிதாக ஒன்றும்
புரிந்ததுமில்லை புரிந்தாலும் அதை சட்டை செய்யும் பருவமுமில்லை.. ஆனால் இப்போது எண்ணிப் பார்த்தால் , எதுவும் அறியாத அரை வேக்காடாய் எல்லோரிடமும் ஏச்சும் பேச்சும் வாங்கினாலும் , “அறியாமை வரம்” பெற்றிருந்த அக்காலம் பொற்காலமே!! உங்கள் பதிவு பல நாட்களாக கேட்பாரற்று மங்கிய முந்தைய நினைவுகளின் வேர் வரை சென்று இனிப்பூட்டியது. 😍☺
LikeLike